வைகை அணையில் இருந்து நீர் திறப்பு...! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...!

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து 7 பிரதான மதகுகள் வழியாக 2000 கனஅடி தண்ணீர் திறப்பு...கரையோர மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு...! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியாக உள்ளது. இந்த நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றின் பூர்வீக பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள், அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கி வைக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரையில் 3 கட்டங்களாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் உள்ள 7 பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு   ஆற்றின் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறியது.

3 கட்டங்களாக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் வைகையின் பூர்வீக பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை பகுதிகளில் உள்ள  91 கண்மாய்களில் நீரை பெருக்க முடியும். இந்த மூன்று மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து 3 கட்டங்களாக 1,377 மில்லியன் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. அதனால் 5 மாவட்டத்திலும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.