7.5 லட்சம் கோடி முறைகேடு பற்றி பிரதமர் வாய் திறக்காதது ஏன்? முதலமைச்சர் கேள்வி!

சி ஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழரை லட்சம் கோடி முறைகேடு பற்றி பிரதமர் வாய் திறக்காதது ஏன்? என்று  'ஸ்பீக்கிங் பார் இந்தியா'  2-வது பிரசார ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "CAG எழுப்பிய 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகளும் பிரதமரின் மவுனமும்" என்ற தலைப்பில் இன்று (23-09-2023) வெளியிட்டுள்ள Speaking for India பாட்காஸ்ட் சீரிசின் இரண்டாவது அத்தியாயத்தில் 7.5 லட்சம் கோடி முறைகேடு பற்றி பிரதமர் வாய் திறக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில்,  நம்முடைய நாடும் - நாட்டு மக்களும் மீண்டும் பா.ஜ.க.விடம் ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் இந்த Speaking For India பாட்காஸ்ட் சீரிஸ்-ஐ தொடங்கியிருக்கிறேன். 2014-ஆம் ஆண்டு ஏமாந்தது போல், 2019-ஆம் ஆண்டு ஏமாந்தது போல், 2024-ஆம் ஆண்டும் நாடு ஏமாந்துவிடக் கூடாது.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு - குஜராத் மாநிலத்தை முன்னேற்றி - அங்கே தேனாறும் - பாலாறும் ஓடுவதுபோல பொய்ச் செய்திகளை பரப்பி - அதன் மூலமாக, தன்னை வளர்ச்சியின் நாயகனாக காட்டிக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

 “60 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதம் கொடுங்கள். நான் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன்” - என்று சொன்னார் மோடி அவர்கள். அவருக்கு 60 மாதம் மட்டுமில்லை - கூடுதலாக, இன்னொரு 60 மாதம் ஆட்சி செய்கிற அளவிற்கு வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா? என்பதுதான் அவர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. எந்த வகையில் எல்லாம் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட அவரால் முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியா கூட்டணியைப் பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என்று குற்றம் சாட்டுகிற மோடி அவர்களே! உங்கள் ஆட்சியைப் பற்றி சி. ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப் பார்த்தீர்களா? இதைப் பற்றி சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதித்தீர்களா? இல்லை பதில் சொன்னீர்களா?

அயோத்தியா திட்டத்தில் கூட ஊழல் செய்த கட்சிதான் பா.ஜ.க. என்று சி. ஏ.ஜி. அறிக்கை சொல்லியிருக்கிறது. எல்லாத் திட்டங்களுக்கும், நம்முடைய வாய்க்குள் நுழையாத பெயராகப் பார்த்து வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

அதாவது இராமாயணம் நடந்த இடங்களுக்கு எல்லாம் பயணிகளை அழைத்துச் செல்லும் சுற்றுலாத் திட்டம் அது. இதை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், கோவா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் செயல்படுத்தப் போவதாக சொன்னார்கள்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதில், பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக சி. ஏ.ஜி.  குற்றம் சாட்டி இருக்கிறது. ஒப்பந்தம் வழங்கியதில் எத்தகைய விதிமீறல்கள் இருக்கிறது என்று இந்த அறிக்கை சொல்லியிருக்கிறது எனக் கூறியுள்ளார். 

அடுத்து, பா.ஜ.க. அறிவித்ததை நிறைவேற்றாது என்பதற்கு சி. ஏ.ஜி. அறிக்கை ஒரு எடுத்துக்காட்டை சொல்லியிருக்கிறது. அதுதான் உதான் திட்டம். மிகப்பெரிய பீடிகையோடு இந்த திட்டத்தை தொடங்கினார்கள். ஏழைகள் விமானத்தில் பயணிக்கலாம், நடுத்தர நகரங்களிலும் விமான நிலையம் அமைக்கப்போகிறோம் என்று சொல்லி 2016-ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் இது.

உதான் திட்டத்திற்காக ஒன்றிய அரசு 1,089 கோடி ரூபாயை ஒதுக்கியது. திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் விமான சேவை வழங்க முடிவு செய்ததில் 7 விழுக்காடு தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகிறது. 93 விழுக்காடு தடங்களில் விமானங்கள் இயக்கப்படவில்லை.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் சேலம், தஞ்சாவூர், இராமநாதபுரம், வேலூர் நகரங்களுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிடப்பட்ட இந்த 4 நகரங்களில் சேலத்திற்கு மட்டும்தான் உதான் திட்டத்தில் விமானம் இயக்கப்பட்டது. அதுவும் இப்போது இல்லை. மொத்தமாக அறிவிக்கப்பட்ட 774 வழித்தடங்களில் 720 வழித்தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை என்று சி. ஏ.ஜி அறிக்கை சொல்லியிருக்கிறது என கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், 2024 தேர்தலில், பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க.வின் வகுப்புவாத - ஊழல் - கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலாக முழங்க வேண்டும். பரந்து விரிந்த நம் இந்திய நாட்டை காப்பாற்றுகிற கடமை நம் எல்லோரின் கையிலும்தான் இருக்கிறது என கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படிக்க: கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது 20 கிலோ; கஞ்சா பறிமுதல்!