பெட்ரோலில் லிட்டருக்கு 10 ரூபாய் லாபம் கிடைத்தும் விலையை குறைக்க மறுப்பது ஏன்? ராமதாஸ் கேள்வி!

பெட்ரோலில் லிட்டருக்கு 10 ரூபாய் லாபம் கிடைத்தும் விலையை குறைக்க மறுப்பது ஏன்? ராமதாஸ் கேள்வி!
Published on
Updated on
1 min read

லிட்டருக்கு 10 ரூபாய் லாபம் கிடைத்தும் பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பதா? என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் :

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை வலியுறுத்தி பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ”உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக, பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 10 ரூபாய் கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஆனாலும், சில்லறை விற்பனை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது  கண்டிக்கத்தக்கது.

எரிபொருள் விலை :

2022 ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பிறகு, கடந்த 278 நாட்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக் கொண்டிருக்கிறது.

கைவிடப்பட்ட முடிவு:

கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6 லாபம் கிடைத்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலைகளையும் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால், திடீரென அம்முடிவு கைவிடப்பட்டதன் காரணம் புரியவில்லை.

கேள்வி எழுப்பிய ராமதாஸ்:

மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்பதை வலியுறுத்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com