அதிமுகவுக்கு கிடைக்குமா இரட்டை இலை சின்னம்? 

அதிமுகவுக்கு கிடைக்குமா இரட்டை இலை சின்னம்? 

அதிமுக தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படாத சூழலில் கர்நாடக தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மதம் 10 ஆம் தேதி 224 சட்ட மன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் புலிகேசி நகர் வேட்பாளராக அன்பரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இரட்டை சிலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நாட இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவில் அதிமுக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதாலும், அதிமுக ஒரு தேசிய கட்சி இல்லை என்பதாலும் அங்கு அதிமுகவிற்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள், திருத்தங்களை அங்கீகரித்தது தொடர்பாக பத்து நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது. 

இதனிடையே நீதிமன்ற வழக்குகளை சுட்டிக்காட்டி இருவருக்கும் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வாய்ப்பில்லை என சட்டவல்லுநர்கள் தகவல் தெரிவிகின்றனர். ஓபிஎஸ் – இபிஎஸ்  ஆகிய இரு தரப்பினரையும்  தனிச்சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிமுகவினரிடையே அதிகரித்துள்ளது.