வாழ்த்து தெரிவிக்க வந்த நிர்வாகியை அடித்து உதைத்து அனுப்பிய அதிமுக தொண்டர்கள்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அதிமுக நிர்வாகியை அக்கட்சி தொண்டர்களே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்று காலை அதிமுக அலுவலகத்திற்கு அக்கட்சியின் முன்னாள் கர்நாடகா செயலாளர் புகழேந்தி வரவுள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில், அதிமுக கட்சி தலைமையினருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த நிர்வாகியை புகழேந்தி ஆதரவாளர் என நினைத்து சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\
இதுகுறித்து பேசிய அதிமுக பெரம்பூர் தொகுதி மாணவரணி துணை செயலாளர் விஜயகுமார், வடசென்னை மாவட்ட செயலாளரான ராஜேஷ் தான் முன்விரோதம் காரணமாக தன்னை புகழேந்தியின் ஆதரவாளர் என வதந்தியை பரப்பி தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு தூண்டுகோலாக இருந்த ராஜேஷ் மீது காவல்நிலையத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமைக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய மேலும் 2 பேர் வந்ததாக தகவல் பரவியதையடுத்து சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது...