அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... சென்னை வந்த எடப்பாடி பழனிச்சாமி!!

கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதல் இரு கட்சியினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறிவருகிறார். 

அதே சமயம், அதிமுகவுக்கு எதிராக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக வைத்த கோரிக்கையை பாஜக மேலிடம் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது அரசியல் நாடகம் என பல்வேறு தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பெட்டை தலைமை அலுவலகத்தில் 25-ம் தேதி  நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவை கூட்டணியை விட்டு விலக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலத்தில்  இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com