வேங்கைவயல் வழக்கு...! சிபிஐக்கு மாற்ற அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை...!!

வேங்கைவயல் வழக்கு...! சிபிஐக்கு மாற்ற அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை...!!
Published on
Updated on
1 min read

வேங்கை வயல் விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் இள முருகு முத்து தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கடந்த 4 மாத காலங்களாக சிபிசிஐடி காவல்துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் வேங்கைவயல், இறையூர், காவேரி நகர், கீழ முத்துக்காடு, மேல முத்துக்காடு உள்ளிட்ட  கிராமங்களை சேர்ந்த 147 பேரிடம் விசாரணை மேற்கொண்டு சாட்சியங்கள் பெற்றுள்ள நிலையில் தற்போது அதில் 11 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக இரத்த மாதிரி சேகரிக்க நீதிமன்றத்தின் ஆணையை பெற்றுள்ளனர்.

இதனிடையே அந்த 11 நபர்களில் முதல் நபரான காவல்துறையில் பணியாற்றும் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த முரளி ராஜா,மற்றும் 9 வது நபரான கண்ணதாசன் ஆகிய இருவருக்கும் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததை அடுத்து அதற்கான அனுமதியை நீதிமன்றம் அளித்தது.

அதன் அடிப்படையில் இருவரும் இன்று சென்னை  தடயவியல்  அறிவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனைக்காக ஆஜராகினர்.

வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டது என்றும்,அந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் உருவாக்கியிருந்த வாட்சப் குழுவில் முரளிராஜா, கண்ணதாசன் உள்ளிட்டோர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை குரலாக பதிவிட்டிருந்ததாகவும் தெரிகிறது. அந்த குரல் பதிவு சிபிசிஐடி காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து உறுதி செய்ய தற்போது இருவரிடமும் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறினர். 

இதனிடையே வழக்கின் விசாரணையை திசை திருப்ப நினைப்பதாகவும் விசாரணையை சி.பி.ஐ நடத்த வேண்டும் என இந்த விவகாரத்தில் முதன் முதலாக குரல் கொடுத்த அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இள முருகு முத்து தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com