சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களை நிறுத்தம் செய்து சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முறைகளில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரேடியோ சிட்டி எப்.எம் மற்றும் சரிகமபா இசை குழுவினருடன் இணைந்து 105 போக்குவரத்து சிக்னல்களில் இசை பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் அடங்கிய இசை சிக்னல் சென்னை காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கப்பட்ட பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு குறுந்தகவல்களை நிறுத்தி சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக இசை சிக்னல் மூலம் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், ஒலி மாசு ஏற்படுவதன் காரணமாக ஒலிக்கப்படும் பாடல்களை இனி ஒலிபரப்ப வேண்டாம் என போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் பாடல்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே பணியில் உள்ள காவலர்கள் செல்போனை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.