டாஸ்மாக் திறக்க தடை...உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!

டாஸ்மாக் திறக்க தடை...உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!

சென்னை பெரியமேடு குடியிருப்பு பகுதியில்  புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரிய மேட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைச் செயலக ஊழியரான மனோகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.  பெரிய மேட்டில் உள்ள நேவல் மருத்துவமனை சாலையில் தான் இளம் வயதில் இருந்து வசித்து வருவதாகவும் இந்த  பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் அன்றாடம் கூலி வேலை பார்க்கும் மக்களும் இப்பகுதியில் வசித்து வருவதாகவும் கடந்த 20 ஆண்டுக்கு  முன்பு இதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை போராட்டம் செய்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரி, மத வழிபாடு தளங்களும் இருப்பதாகும் இந்நிலையில் நேவல் மருத்துவமனை சாலையில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க  டாஸ்மாக் மேலாண்  இயக்குனர் ,டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோர் அனுமதி வழங்கி உள்ளனர். 

இந்த கடை செயல்பட தொடங்கினால் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் இது தொடர்பாக கடந்த ஆண்டு டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த  நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே புதிய டாஸ்மாக் கடையை திறக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் மேலும் தன்னுடைய மனு மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரியும் மனுவில் தெரிவித்துள்ளார்.  இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணை வந்தது 

புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.  அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பெரியமேடு பகுதியில்  புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com