உதயநிதி போட்டோவை சாமி ரூமில் வைத்து பூஜை பண்ணட்டும்... போட்டோவை பார்த்து கடுப்பான ஜெயக்குமார்..!

உதயநிதி போட்டோவை சாமி ரூமில் வைத்து பூஜை பண்ணட்டும்... போட்டோவை பார்த்து கடுப்பான ஜெயக்குமார்..!

சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது. எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்


சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தப்பின்  2010 ம் ஆண்டு திமுக அரசு, மத்திய அரசாக இருந்த காங்கிரஸின் முழு ஆதரவோடு நீட் தேர்வை கொண்டு வர காரணமாக இருந்துவிட்டு தற்போது நீட் தேர்வு குறித்து திமுக அரசு முன்னுக்கு பின் முரணாக மாணவர்களை ஏமாற்றும் விதமாக, தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்று பேச்சை மாற்றி  பேசி வருகிறது. 

நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை திமுக தெரிவிக்க வேண்டும் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது உண்மைக்கு மாறான ஒன்று. மேலும் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக அரசு.

மேலும் எந்த உரிமையும் இல்லாத சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது. முன்னாள் முதல்வர்  எம்.ஜி ஆரின் மனைவி  வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக  எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும் மாறாக தடையாக இருக்க கூடாது என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் படத்தை சட்டமன்றத்தில் தனது அறையில் சட்ட அமைச்சர் மாட்டியது விதிமீறலாகும். சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தை வைத்து பூஜை செய்யட்டும்  அதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும்  கூறினார்.