ஆயிரத்து 600 ஏக்கரில் ஜவுளி பூங்கா...கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆயிரத்து 600 ஏக்கரில் ஜவுளி பூங்கா...கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விருதுநகர் சிப்காட்டில் ஆயிரத்து 600 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர்:

பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது சென்னையில் ஜவுளி நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். தொடர்ந்து, நூற்பாலை ஊழியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும், எனவும், புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து:

விருதுநகர் சிப்காட்டில் ஆயிரத்து 600 ஏக்கரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் எனவும், அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் 4 பெரிய பன்னாட்டு விமான நிலையங்கள், 2 உள்நாட்டு விமானநிலையங்கள், 3 துறைமுகங்கள் மற்றும் 19 சிறு துறைமுகங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடத்திலும், ஏற்றுமதியில் 3வது இடத்திலும் உள்ளதாகவும், தமிழ்நாடு அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் மாநிலமாக திகழ்வதாகவும் கூறினார். 

முதலீட்டாளர்கள் உதவ வேண்டும்:

மேலும், மாமல்லபுரத்தில் 30 கோடி ரூபாயில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும், கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 2030ஆம் ஆண்டு ஒரு டரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்ட முதலீட்டாளர்கள் உதவ வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com