ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரம்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்!

Published on

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.சார்பில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்.  சார்பில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

பின்னர், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ஆம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் பிரபு மனோகர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்த அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டுமெனவும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு கோரிக்கை விடுத்தார். 

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி, மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்த பின்னர், விசாரணைக்கு பட்டியலிட்ட பின்னர் விசாரிக்கப்படும்  என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com