அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு...
கரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ். இன்று காலை வழக்கம் போல் சீருடை அணிந்து அலுவலகத்திற்கு சென்ற அவர், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்த முயன்று போது அவர் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த கனகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் பலியான மோட்டார் ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.