தென்மாவட்டங்கள் செல்லும் விமானங்களில் 5 மடங்கு கட்டணம் உயர்வு!

தென்மாவட்டங்கள் செல்லும் விமானங்களில் 5 மடங்கு கட்டணம் உயர்வு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கான விமானக் கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பமாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சிறப்பு பஸ்கள் அனைத்திலும் பயணிகள் முன்பதிவு செய்து விட்டனர். தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாக பயணிகள் கருதுகின்றனர்.

இதனால் ஆம்னி பஸ்க்ளில் செல்வதை விட விமான பயணம் பல மணி நேரம் மிச்சம் ஆவதால் தொடர் விடுமுறை நாட்களில் விமான பயணத்தை விரும்புகின்றனர். இதன் முலம் சொந்த ஊரில் குடும்பத்தாருடன் கூடுதல் நேரம் செலவிட முடியும் என்பதால் விமான பயணம் அதிகரித்து உள்ளது. 

இதனால் சென்னையில் இருந்து  தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவைக்கு செல்லும் விமானங்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் இன்றும் நாளையும் 2 தினங்கள் விமானங்களில் பெரும்பாலான டிக்கெட் விற்பனை ஆகிவிட்டன. ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட்கள்  கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.

கட்டண விவரம்:

சென்னை-சேலம் வழக்கமான  கட்டணம் ரூ.2,390. இன்றும் நாளையும் கட்டணம் ரூ.11,504.

சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ. 4,273. இன்றும் நாளையும் கட்டணம் ரூ.13,287.

சென்னை-கோவை  வழக்கமான கட்டணம் ரூ.3,315. இன்றும் நாளையும் கட்டணம் ரூ.13,709.

சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,190. இன்றும் நாளையும் கட்டணம் ரூ.13,086.

சென்னை-மதுரை  வழக்கமான கட்டணம் ரூ.3,314. இன்றும் நாளையும் கட்டணம் ரூ.13,415.

இதைப்போல் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் விமான டிக்கெட் கட்டணத்தை பற்றி கவலை இல்லாமல் பயணித்து வருகின்றனர்.