ஹேக் செய்ய முயல்கிறார்,.முன் ஜாமீன் கொடுக்காதீங்க,.. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி குற்றச்சாட்டு.!

ஹேக்  செய்ய முயல்கிறார்,.முன் ஜாமீன் கொடுக்காதீங்க,.. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி குற்றச்சாட்டு.!



முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகையின் இமெயில், டெலிகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் கணக்குகளை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஹேக் செய்ய முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகை சாந்தினி கடந்த 28 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி குடும்பம் நடத்தி, கோபாலபுரம் தனியார் மருத்துவமனையில் மூன்று முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். திருமண செய்துகொள்ள கேட்டபோது தன்னை அடித்து காயப்படுத்தியதோடு, தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் உதவியாளர் பரணி என்பவர் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், நடிகையின் புகார் மற்றும் அவர் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் நம்பிக்கை மோசடி, பாலியல் பலாத்காரம், வேண்டுமென்றே காயப்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புகாருக்கு ஆளானவர் முன்னாள் அமைச்சர் என்பதால் தகுந்த ஆதாரங்களுடன் அவரை கைது செய்யும் பொருட்டு, அவர் மீது போடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகளுக்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திலும், சென்னையிலும் இல்லை என்பதால் அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பொருட்டு தனிப்படை காவல்துறையினர் நேற்று ராமநாதபுரம் சென்று முன்னாள் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் அருண் என்பவருக்கு சம்மன் அனுப்பி அவரிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகையின் இமெயில், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஹேக் செய்ய முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சி.பி. ஐ இயக்குனர் என கூறி மெயில் ஒன்று நடிகைக்கு வந்துள்ளது. அதன் மூலம் நடிகையின் இமெயில் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை பெற முயற்சித்து ஹேக் செய்ய திட்டமிடுவது தெரியவந்துள்ளது. 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்பான ஆதாரங்கள் நடிகையின் டெலிகிராம் மற்றும் இமெயிலுடன் இணைக்கப்பட்ட ஐ-கிளௌடில் உள்ளதால் அதை அழிக்க சைபர் ஹேக்கர்கள் மூலம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகை அடையாறு சைபர் கிரைம் காவல் துறையினரை அணுகியபோது, அந்த மெயில் ஐ.டி போலியானது என தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால் அதை எதிர்த்து அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என நடிகை சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவிலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் வெளியில் இருந்தால் ஆதாரங்களை தனது ஆள் மற்றும் பண பலத்தால் அழிக்க முயற்சிப்பார் என குறிப்பிட்டு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.