தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மதுரை மாநகரத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுப்பம், மணவாளநகர், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், திருப்பாச்சூர், பாண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.