“இதுதான் சங்கமமா...தமிழ்நாட்டிற்கு செய்யும் வஞ்சகம்...” சு.வெங்கடேசன்!!

“இதுதான் சங்கமமா...தமிழ்நாட்டிற்கு செய்யும் வஞ்சகம்...” சு.வெங்கடேசன்!!

தமிழ்நாட்டில் உள்ள இன்னொரு பயிற்சி மையமான சேலத்தில் கூடைப்பந்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் அங்கு பெண்களுக்கான இடங்கள் தரப்படவில்லை. கைப்பந்து பயிற்சிக்கு தமிழ்நாட்டில் வேறு பயிற்சி மையமே இல்லை. 

தமிழ்நாட்டில் பயிற்சி மையம்:

பல் வகை விளையாட்டுகளுக்கான இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் பயிற்சி மையங்கள் 37 நகரங்களில் உள்ளன எனவும் அதில் இரண்டு தமிழ்நாட்டில் உள்ளதாகவும் மயிலாடு துறையில் உள்ள பயிற்சி மையம், கூடைப் பந்து மற்றும் கைப்பந்துக்கான அங்கீகாரம் பெற்று பயிற்சியையும் வழங்கி வருவதாகவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

மேலும் அதில்  இது பெண் கூடைப்பந்து வீரர்களுக்கான சிறப்பு மையம் எனவும் பெண் விளையாட்டு வீரர்கள் அங்கு கூடைப்பந்து பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எழுந்த ஆபத்து:

தற்போதைய இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டன் புஷ்பா மற்றும் அணியில் உள்ள சத்யா ஆகியோர் இந்த மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் ரயில்வேயில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற்றுள்ளதாகவும் இவர்கள் 2018 இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்களிலும் பங்கேற்றவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள வெங்கடேசன் இவர்களில் புஷ்பா நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறியகிராமமான முடி கண்ட நல்லூரில் இருந்து மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றவர் எனவும் எழுதியுள்ளார்.  

தற்போது இப்படிப்பட்ட மயிலாடு துறை மையத்தில் கூடைப்பந்து, கைப்பந்து பயிற்சி பெறுவதற்கு ஆபத்து எழுந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சி மையமே இல்லை:

இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 518/SAI/ OPS/STC review/2022 -23/ 05.04.2023, மயிலாடுதுறையில் உள்ள கூடைப்பந்து, கைப்பந்துக்கான பயிற்சி அங்கீகாரத்தை ரத்து செய்து வேறு மையங்களுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது என்பதை கடிதத்தில் குறிப்பிட்ட அவர் தமிழ்நாட்டில் உள்ள இன்னொரு பயிற்சி மையமான சேலத்தில் கூடைப்பந்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் அங்கு பெண்களுக்கான இடங்கள் தரப்படவில்லை எனவும் கைப்பந்து பயிற்சிக்கு தமிழ்நாட்டில் வேறு பயிற்சி மையமே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பயிற்சிக்கு எங்கு செல்வார்கள்?:

உத்தரப் பிரதேசம் வாரணாசி மையத்தில் கூடைப்பந்து பெண் வீரர்கள் பயிற்சி பெற இடங்கள் தரப்பட்டுள்ளதாகவும் இல்லையெனில் சத்திஸ்கரில் உள்ள ராஜ்னந்த்கன் நகருக்கு செல்ல வேண்டும் எனவும் இந்த இரண்டு ஊர்களில் மட்டுமே கூடைப்பந்து பயிற்சிக்கு பெண்களுக்கான இடங்கள் மேற்கண்ட சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.  

அதனை தொடர்ந்து வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் விமரிசையாக நடத்தப்பட்டது எனவும் கலாச்சார பாலம் அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் அறிவித்தார்கள் எனவும் நமது முடிகண்ட நல்லூர் புஷ்பாக்கள் இந்த பாலத்தின் வழியாக  வாரணாசிக்கு செல்ல வேண்டியிருக்கும் என அப்போது அறிந்திருக்கவில்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சு. வெங்கடேசன்.

இதுதான் சங்கமமா?:

மேலும் தற்போது மதுரை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனைகள் பள்ளிப் படிப்பையும், கூடைப்பந்து பயிற்சியையும் ஒரு சேர பெற்றுவருவதாகவும் மயிலாடுதுறை பயிற்சிக்காக பள்ளி படிப்பையே அந்த ஊருக்கு மாற்றியுள்ள மாணவிகளின் கதி என்ன?  எனவும் அணியின் கேப்டன் ஆகவே உயர முடிந்த எங்கள் தமிழ்நாட்டின் புஷ்பாக்கள் எதிர்காலத்தில் வாரணாசி வரை பயிற்சிக்காக ஓட வேண்டி இருப்பதுதான் வாரணாசி சங்கமமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

சு. வெங்கடேசன்:

இந்த உத்தரவை ரத்து செய்து மயிலாடுதுறையிலேயே கூடைப்பந்து, கைப்பந்து பயிற்சி மையம் தொடர வழி வகை செய்யுமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்திய விளையாட்டு ஆணைய பொது இயக்குனர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நாடாளுமன்ற எம். பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பெண்களுக்கு தொடரும் தடைகள்.... உணவகங்களுக்கு செல்லவும் தடை!!