விஷசாராயம் விவகாரம்: 2 கொலை வழக்குகள் பதிவு...!

விஷசாராயம்  விவகாரம்:  2 கொலை வழக்குகள் பதிவு...!

மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து, பலரும் அதே போன்று  இறந்தும், தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தநிலையில், உயிரிழந்தவர்கள் குடித்த சாரயத்தில் மெத்தனால் என்னும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 

இந்த வழக்கு தீவிரமடையவே, பல இடங்களில் காவல் துறையினர் சாராயம் வியாபாரம் செய்யும் இடங்களிலும் போலி மதுபானக் கடைகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர். இதில் ஏராளமான சாராயம் காய்ச்சும் கிடங்குகள் மற்றும், ஊரல்களும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் போடப்பட்டு வருகின்றது. மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் கைது செய்யப்பட்டு கிடங்குகள் அழிக்கப்பட்டும் வருகின்றன. இதில் மரக்காணம் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல் துறையினர் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு கடந்த 15 ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான 12 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி அதிகாரிகள். கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேரையும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்,  சிறையில் உள்ள 11 பேரையும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது, இந்த வழக்கில் மீண்டும் இரண்டு பேர் மீது கொலை வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது.  

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த விஷசாராய மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் பேரில் சித்தாமூர் மற்றும் அச்சரம்பாக்கம் விஷ சாராயம் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று செங்கல்பட்டு சிபிசிஐடி விசாரணை அதிகாரியான ஏ டி எஸ் பி மகேஸ்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஏடிஎஸ்பி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் அச்சரம்பாக்கம் மற்றும் சித்தாமூர் ஆகியவை தொடர்புடைய வழக்குகளை கொலை வழக்குகளாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் மீதமுள்ள நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்ய கோரி சிபிசிஐடி விசாரணை அதிகாரி செங்கல்பட்டு ஏடிஎஸ்பி மகேஸ்வரி தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு உடன் கேட்டுள்ளதாகவும், சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக சம்பவ இடத்திற்கு சென்று விஷசாராயம் விற்பனை செய்யப்பட்ட ஜூஸ் பாட்டிலை கைப்பற்றி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப இருப்பதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நபர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருப்பதாகவும் சிபி.சி.ஐடி  திட்டமிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com