ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய கல்வித் துறையின் மண்டல அளவிலான கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள்-அதிகாரிகள் பங்கேற்பு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கல்வித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் 2500 பள்ளிகள் மரத்தடியில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையில் உள்ளது. புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள் மதில் சுவர்கள் ஆகியவற்றிற்கு நிதிகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும்.
அன்பில் மகேஷ் குறித்து டிவிட்டர் ட்ரெண்டிங் ஆனது குறித்த கேள்வி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கல்வி தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசை துவங்குவதற்கு முறையாக அதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் மட்டுமே அவரை தேர்வு செய்தனர். அவரின் பின்புலம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் வருவதாலும் தற்பொழுது என்னையும் சேர்த்து விமர்சனங்கள் எழுவதால் அதனை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளது போல் எதிலும் சமரசம் இல்லை. அவருடைய வளர்ப்பு நான். இதை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறேன் என்றார். புதிய ஆசிரியர்கள் 2500 பேர் விரைவில் தேர்வாகி பணியில் அமர்த்தப்பட உள்ளனர்,மேலும் ஆசிரியர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கான டெட் தேர்வு அனைத்தும் முறைப்படி நடத்தி பணியில் அமர்த்தப்படுவார்கள் என குறிப்பிட்டார்.