மீனவர் விவகாரம்…வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மீனவர் விவகாரம்…வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழ்நாட்டு மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் கடந்த செப்டம்பர் 6 அன்று புதுச்சேரியைச் சேர்ந்த விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் பிடியில் 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.