நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாமக போராட்டம்!

நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாமக போராட்டம்!

பாட்டாளி மக்கள் கட்சியினர் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களை ஏமாற்றும் என்.எல்.சி நிறுவனம்

என்.எல்.சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் மின்தேவைக்காக காமராசர் காலத்தில் உருவாக்கப்பட்டது தான் என்.எல்.சி. நிறுவனம். இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு 30 கிராம மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பது தான்.

 ஆனால், அப்படியான உறுதிமொழியை ஒன்றிய அரசும் என்.எல்.சி நிர்வாகமும் தொடர்ந்து மீறி வருவதாக கூறப்படுகிறது. அதாவது என்.எல்.சி நிறுவனத்தில் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி, அதனைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வையும் நடத்தி முடித்திருக்கிறது. இதில் தயாரிக்கப்படும் மின்சாரமும் தனியார் பெருமுதலாளிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் தான் கொண்டு செல்லப்படுகிறது.

பாமக போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம் அண்மையில் தேர்வு செய்துள்ள  299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. பணியில் நியமிக்கப்பட்ட தமிழரல்லாதவர்களை  திரும்பப் பெறக் கோரி பாமகவினர் நெய்வேலி ஆர்.சி.கேட்  அருகே என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சுரங்கம் ஒன்று, சுரங்கம் ஒன்று விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று நிலக்கரி சுரங்கங்கள் உள்ளது இதன் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்மையில் நடைபெற்ற பொறியாளர் தேர்வில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை புறக்கணிக்கிறது. எனவே 299 பொறியாளர்கள் நியமனத்தை ரத்து செய்ய கோரி பாமகவினர் நெய்வேலி ஆர் சி கேட்  அருகே என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.