ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்:.....
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலக புகழ்பெற்ற மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பண்ணை மற்றும்
பூங்கா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 20 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ......
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்கா மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லும் வகையில் பூங்காக்களைத் தயார் படுத்தும் பணியில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பண்ணைகளிலும் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினக்கூலியாக 400 ரூபாய் மட்டுமே பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலவரை தொகுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும், அரசாணைபடி அறிவித்த நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை காலியாக உள்ள பண்ணை மற்றும் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்களில் நிரந்தர பணியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் தாவரவியல் பூங்காவில் 20வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களது கோரிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சரும், வேளான் துறை அமைச்சரும் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள தோட்டக்கலை பண்ணை ஊழியர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
போராட்டத்தால் பணிகள் பாதிப்பு ......
மேலும் தொடர்ந்து 20 நாட்களாக பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பூங்கா பராமரிப்பு, தூய்மை பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்திய உணவு பொருட்களின் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கலாய் புல் தரைகள் மற்றும் மலர் செடிகளில் வீசி செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.