மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட மகனை மீட்க வலியுறுத்தி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியை சேர்ந்த அர்ஜுனன்-கலைச்செல்வி தம்பதியின் மகன் சந்தோஷ் குமார், 8 வருடங்களுக்கு முன்பு கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. கணபதி, செல்வராஜ் ஆகியோர் அவரை மூளைச்சலவை செய்து, அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில், மகன் சந்தோஷ் குமார் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து மகனை மீட்டுத் தருமாறும், சார் ஆட்சியரிடம் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர்.