கனமழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்களும் விவசாயிகளும்...!

கனமழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்களும் விவசாயிகளும்...!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், விடுமுறை தினமான இன்று கனமழை பெய்ததால் பொது மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கினர். இருப்பினும் மழை காரணமாக வெப்பம் வெகுவாக குறைந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
அதேபோல், தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் மழை இல்லாமல் வெப்பம் வாட்டி வந்த நிலையில், இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை வருகிறது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால், அவ்வழியாக சென்ற அரசு பேருந்து பாலத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், திருப்பனந்தாள் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com