விமான நிலையத்திற்கு எதிராக 53 ஆவது நாளாகப் போராடும் மக்கள்!
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஏகநாபுரம் கிராமத்தை நோக்கி வந்த பொழுது செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சுங்கச் சாவடி அருகே கைது செய்யப்பட்டார்.

பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளதால் ஏகனாபுரம் கிராமத்தை சுற்றி மையமாக வைத்து நிலம் எடுப்பதாக தகவல் பரவியது.ஆதலால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தினந்தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
தொடரும் போராட்டம்
இன்று 53வது நாளான 500க்கும் மேற்பட்ட மக்கள் ஏகநாபுரம் பகுதியில் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஏகநாபுரம் கிராமத்தை நோக்கி வந்த பொழுது செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சுங்கச் சாவடி அருகே கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருந்தாலும் இந்த உண்ணாவிரதத்தை அமைதியான முறையில் வழிநடத்தி செல்ல இங்கே இருக்கும் மக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பசுமையான எங்கள் ஊரை அழிக்க வேண்டாம்
இதுகுறித்து இந்த கிராம மக்கள் கூறும்போது, பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம் குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும் ,நீர் நிலைகளையும் எடுக்கக் கூடாது அதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஒரு குழு அமைத்து எங்களிடம் கருத்து கேட்டு 80 சதவீத மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிலம் எடுக்க அரசு முன்வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விமான நிலையம் அமைவதற்கு எங்கள் கிராமத்தை தேர்வு செய்யாமல் மாற்று இடத்தை அரசு முன்வந்து தேர்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.