துத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக, அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்பு, சேதங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆணையத்தின் பரிந்துரையின்படி, மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளை தவிர 38 வழக்குகளை திரும்பப்பெற்றிடவும், அரசியல் கட்சி தலைவர்களின் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படுகின்றன.