இலங்கையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. இதனால் வாழ வழியின்றி தவிக்கும் மக்கள் தமிழகத்திற்குள் அகதிகளாக நுழையும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் இந்திய எல்லைப் பகுதியில் இருக்கும் மணல் தீடையில் ஒரு ஆண், 2 பெண்கள், மற்றும் 3 குழந்தைககள் நிற்பதாக கியூ பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல்படையினர் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் தலைமன்னார் பகுதியில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரிய வந்தது. மேலும் பலர் இதுபோன்று வருவதற்கு தயாராக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது கரை அழைத்து வரப்பட்டிருப்பவர்கள் அகதிகளாக ஏற்கப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது முழு விசாரணைக்குப் பின்பே தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.