தேசிய கல்விக் கொள்கை, மத்திய அரசால் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது.
இதையடுத்து மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கான குழுவை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முருகேசனை தலைவராக கொண்டு மாநிலக் கல்வி கொள்கை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வருட காலத்தில் கல்விக்கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குழுவுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.