”தி கேரளா ஸ்டோரி” தடை - வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

”தி கேரளா ஸ்டோரி” தடை - வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் ஷைன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள தி கேரளா ஸ்டோரி படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இந்த படம், வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

எந்த ஆரய்ச்சியும் செய்யாமல், எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல், உண்மை சம்பவம் எனக் கூறி நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, சிரியா மற்றும் ஏமனில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் வகையில் டீசரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என பிரகடனமும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பொய்யான தகவல்களை, எந்த ஆதாரங்களும் இல்லாமல் எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட  அனுமதித்தால், இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், பொது ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் படத்தை வெளியிட முழு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், டீசரில் உண்மை கதை என்றும், பேட்டிகளில் கற்பனை கதை என்றும் கூறுகின்றனர் எனவும், படத்துக்கு எதிராக அளித்த புகார் மீது உத்தரவு பிறப்பிக்காமல் தணிக்கை சான்று வழங்க முடியாது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கதை தான் இந்த படம் எனவும், ஏற்கனவே தணிக்கை சான்று வழங்கப்பட்ட நிலையில் படத்துக்கு தடை விதிக்க கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வாதிடப்பட்டது.தணிக்கை சான்றை எதிர்த்து தான் வழக்கு தொடர முடியுமே தவிர, தடை கோர முடியாது எனவும் படத்தில் 14 காட்சிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கேரளா ஸ்டோரி கேர்ளாவில் வெளியிடும் போது ஏன் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.தமிழக அரசுத்தரப்பில், ஏற்கனவே இந்த பட விவகாரம் தொடர்பாக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும், படத்துக்கு தமிழக அரசு ஆதரவோ, எதிர்ப்போ இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.இதையடுத்து, கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com