
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 59,763 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைத்தார். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு , சர்க்கரை நோய், புற்றுநோய், காச நோய் , சிறுநீரக சிகிச்சை முடக்கு வாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
அதன் படி மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 59,763 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதேபோல், இத்திட்டம் துவங்கப்பட்டு இதுவரை நீரிழிவு நோய்காக 17,143 நபர்களும், உயர் இரத்த அழுத்த நோய்க்கு 26,858 நபர்களும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் 12,130 நபர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 17 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளும் வழங்கப்பட்டுள்ளது.