பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி... வைகோ குற்றச்சாட்டு...

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலியாகிவிட்டதாக வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.
பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி... வைகோ குற்றச்சாட்டு...
Published on
Updated on
1 min read
பீமாகோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மூச்சு அடங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டேன் சுவாமி, ஜார்கண்ட் மாநிலத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மலைவாழ் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றி வந்தார். சமூகச் செயல்பாட்டாளராகவும், மனித உரிமைப் போராளியாகவும் திகழ்ந்த ஸ்டேன் சுவாமி, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைக்காக போராடியவர், குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர்.
ஸ்டேன் சுவாமி கிறிஸ்தவப் பாதிரியார் என்பதால், பழங்குடியினரை மதமாற்றம் செய்கிறார் என அவர் மீது வன்மம் கொண்டு இந்துத்துவ சனாதன சக்திகள் புழுதிவாரித் தூற்றின.
ஊபா சட்டத்தை ஏவி கடந்த ஆண்டு 2020 அக்டோபர் 8ஆம் தேதி ஸ்டேன் சுவாமியை பீமாகோரேகான் பொய் வழக்கில் சேர்த்து என்.ஐ.ஏ. கைது செய்தது. நடுக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயது நிறைந்த முதியவரை கைது செய்து, மும்பை தலோஜா சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார்கள்.
நடுக்கவாத நோயால் பீடிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி கை நடுக்கத்தால் தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை என்று கூறி தன்னிடமிருந்து கைப்பற்றிய உறிஞ்சுக் குழல் மற்றும் உறிஞ்சுக் குவளையை வழங்க என்.ஐ.ஏ.வுக்கு உத்திரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் என்.ஐ.ஏ., ஸ்டேன் சுவாமியிடமிருந்து உறிஞ்சு குழல் மற்றும் உறிஞ்சு குவளை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று ஈவு இரக்கமின்றி நீதிமன்றத்தில் கூறியது. சிறை நிர்வாகத்தின் சித்ரவதையால் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமிக்கு பிணை வழங்கவும், சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கொடிய கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு பிணை வழங்க என்.ஐ.ஏ. எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க. அரசின் கொடுமையான அடக்குமுறை ஸ்டேன் சுவாமி உயிரையே பறித்துவிட்டது. இந்தக் கொடூர மரணத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
ஸ்டேன் சுவாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com