"யோகா, மத சம்மந்தமான விசயம் கிடையாது, ஆரோக்கியம் தொடர்பானது": வானதி சீனிவாசன் பேச்சு!

"யோகா, மத சம்மந்தமான விசயம் கிடையாது, ஆரோக்கியம் தொடர்பானது": வானதி சீனிவாசன் பேச்சு!

உலக யோகா தினமான இன்றைக்கு, கோவையில் பாஜகவினர்களுக்கு கட்சி சார்பில் அளிக்கப்பட்ட யோகா பயிற்சியில் வானதி சீனிவாசன் பங்கேற்று யோகாவின் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளார்.

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும், யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக  பாஜகவினர்களுக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில், உக்கம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். 

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்றார். மேலும், உலக நாடுகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது என தெரிவித்தார்.  

இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்து வருகின்றது என தெரிவித்த அவர், உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை இந்தியா வழங்கி இருங்கிறது என்றார். கோவை மாநகராட்சி நிர்வாகம், பூங்காகளில்  யோகா செய்வதற்கான தனி  இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மேலும் தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில்  கட்டாயமாக்க வேண்டும் எனவும், இது மத சம்மந்தமான விசயம் கிடையாது, ஆரோக்கியம் தொடர்பானது எனவும் பேசியுள்ளார். யோகா செய்வதால் மாணவர்கள் மன அழுத்தம், வழிதவறி செல்வது போன்றவற்றில் இருந்து விடுபட முடியும் எனவும் தினமும் 30 நிமிடம் யோகா கட்டாயமாக்க பட  வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகச்சை நடந்து  பூரண குணமாக வேண்டும் என தெரிவித்த அவர் மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் அதை தான் நினைப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: எட்டாவது நபர் ஆந்திராவில் கைது!