மகளிர் உரிமை தொகை: காரணம் தெரிந்துகொள்ளும் இணையதளம் செயல்படவில்லை!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஏன் கிடைக்கவில்லை என்பதை, புதிய இணையதளம் மூலம், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மகளிர் தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இணையதளம் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, கடந்த 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், தகுதி இருந்தும் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தகுதி இருந்தும் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை https://kmut.tn.gov. in தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இந்த இணையதளத்தில், ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, அதன் மூலம் ஏன் பணம் வரவில்லை என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உரிமை தொகை கட்டுப்பாட்டு அறையில் உள்ள இ சேவை மையத்திற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய வந்திருந்தனர்.

ஆனால் அரசாங்கம் அறிவித்த இணையதளம் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தகவல் அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தகவல் அறிய வந்த பெண்கள் காத்திருந்தும், திரும்பியும் செல்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தாங்கள் நிராகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அதன் காரணத்தை தெரிந்துக் கொள்வதற்கு கூட சிரமத்திற்கு உள்ளாகியதை நினைத்து அந்த பகுதி மக்கள் புலம்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க || விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அறிய புதிய இணையதளம்!