
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை காலை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.
தமிழகத்தில் விடுப்பட்ட 9 மாவட்டங்கள், 28 விடுபட்ட இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி முதற்கட்டமாகவும் 9-ம் தேதி 2-ம் கட்டமாக 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி, 13-ம் தேதி மாலை வரை நடைபெற்று முடிவுகள் இரவு வரை அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையில் ஒரு சில இடங்கள் தவிர பெரிய பிரச்சனைகள் இன்றி அமைதியாக நடைபெற்றது. இதில் கட்சிகள் மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களை மாவட்டம் வாரியாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.
மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆட்சியர் முன்னிலையில் பதவியேற்கின்றனர். அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நாளை காலை பதவியேற்க உள்ளனர். அவர்களை தொடர்ந்து அந்தந்த ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்க உள்ளனர்.
வரும் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கும், ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் காலையிலும், துணைத்தலைவர் பதவிக்கு மாலையிலும் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் போட்டியின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் பதவியேற்ற உறுப்பினர்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது