என்னது...இனி வங்கி பணப்பரிவர்த்தனைக்கு பான், ஆதார் எண் அவசியமா? - மத்திய அரசு
ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி கணக்கில் பணம் எடுப்பது, பணம் செலுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தம் செய்து அறிவித்துள்ளது. அதன்படி ஒரு நிதியாண்டில் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுத்தாலோ, பணம் செலுத்தினாலோ அத்தகைய பணப்பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு, ஆதார் கட்டாயம் என அரசு கூறியுள்ளது.
இந்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு தொடங்கவோ ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.