சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் 3 கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் 6-ம் பிரகாரத்தில் சமீபத்தில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டிய போது கோவில் கட்டுமான கற்பலகைகள், தூண்கள் உள்ளிட்ட பகுதிகள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் மாவட்ட தொல்லியல் ஆலோசகர் வெங்கடேசன், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த 5 மேற்பட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த 3 கல்வெட்டுகளும் புதிய சோழர்கால துண்டு கல்வெட்டுகள் என கண்டறியப்பட்டது.

இந்த மூன்று கல்வெட்டுகளையும் படித்து விளக்கமளித்த தொல்லியல் ஆலோசகர் பி.வெங்கடேசன் கூறியதாவது: விருத்தக் குமுதப்பகுதியில் உள்ள கல்வெட்டு மன்னர் பெயர் இல்லாத 28- வது ஆட்சியாண்டு வாணகோப்பாடி பெண்ணை வடகரை வயிரமேக சதுர்வேதிமங்கலத்து சபையார் திருவண்ணாமலை மகாதேவருக்கு அதாவது அருணாசலேஸ்வருக்கு அக்கோவிலில் உள்ள பண்டாரமான கருவூலத்தில் இருக்கும் பொன் முதலானவற்றில் கிடைக்கும் வட்டியிலிருந்து ஆண்டாண்டு தோறும் பங்குனி திருவிழா நடத்துவது பற்றி குறிப்படப்பட்டுள்ளது. இது துண்டு கல்வெட்டு என்பதால் மற்ற விவரங்கள் அறியப்பெறவில்லை.

இந்த துண்டு கல்வெட்டின் எழுத்தமைப்பைக் கொண்டு இது முதலாம் ராஜராஜன் காலத்தியதாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. மற்றொரு துண்டு கல்வெட்டில் ஒப்பந்தங்களாக சில குறிப்புகள் உள்னன. அதில்  கோவில் இறைவற்கு தினசரி வழிபாட்டிற்கு ஒரு கலம் நெல்லும் 3 குறுணி அரிசியும் வழங்கப்படவேண்டும் என்றும் மற்றொரு ஒப்பந்தமாக உணவு படைத்தலின் போது நான்கு நாழி நெய் வழங்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பண்டாரத்தில் வைப்பாக உள்ள ஒரு கழஞ்சு பொன்னும் அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு இந்த ஏற்பாடு நடத்தி வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த பகுதியில் உள்ள மற்றொரு துண்டு கல்வெட்டு கிடைக்கப்பெற்றது. இதுவும் கோயில் அதிட்டானத்தின்  ஒரு துண்டு பகுதியாக கிடைக்கிறது. இந்த கல்வெட்டில்  திருவண்ணாமலை உடைய தேவருக்கு, செட்டியாகிய சதூரான பெருந்தச்சனுக்கு வைச்சபூண்டி நிலமாவது என்றும், புடவை செய்து கொடுத்தோம் என்றும், அண்ணாநாட்டு திருவண்ணாத்து  செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் கோவில்  என்றும் பெரிய செறுவு காணிக்கையாக செய்து குடுத்தேன் இம்மடமுடைய என்றும் துண்டு துண்டாக கல்வெட்டு வரி கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த ஒரு செய்தி புலப்படுகிறது.

5 வது வரியில்  அண்ணாநாட்டு திருவண்ணாத்து செம்பியன் மகாதேவி நகரிஸ்வரம் ஸ்ரீ கோவில்  என்ற தொடரிலிருந்து இக்கோயிலில் சோழ அரசி செம்பியன் மாதேவியார் திருவண்ணாமலைக்கு அருகில் அல்லது இக்கோவிலில் தனது பெயரில் செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் என்ற கோவிலை அமைத்த செய்தி கிடைக்கிறது. 

இந்த கோயில் தற்போது எங்குள்ளது என்பது பற்றிய எந்த குறிப்பும் மற்ற கல்வெட்டிலோ அல்லது வேறு எங்கேயும் பதிவு செய்யப்பட்டதாக  அறியமுடியவில்லை. இந்த கல்வெட்டில் நகரீஸ்வரம் என்று குறிப்பிடுவது திருவண்ணாமலையை குறிப்பதாக தெரிகிறது.

இவை சோழர் கால கல்வெட்டுகள் எனில் திருவண்ணாமலை 9,10 நூற்றாண்டிலேயே நகர் மயமான ஒரு ஊராக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது .  இந்த கோவிலில் கிடைத்த 3 துண்டு கல்வெட்டுகளும் சோழர்கள் காலத்தியது என்பதாலும், 3 கல்வெட்டுகளிலும் இது வரை அறியப்பெறாத செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை கோவிலில் மிகுந்த அளவில் சோழர்கள் கால கல்வெட்டுகளும் அழகிய சிறப்பங்களும் இருந்திருக்கும் என்றும் திருவண்ணாமலை 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நகரமாக இருந்துள்ளது என்றும் அதற்கான சான்றுகள் இந்த துண்டு கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. 

மேலும் இந்த துண்டுக் கல்வெட்டுகளை பாதுகாப்பாக கோயில் வளாகத்தில் வைத்து பாதுகாக்குமாறும் ஆவணப்படுத்துமாறும் வரலாற்று ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க: அரிக்கொம்பன் யானைக்கு சிலை வைத்த விவசாயி!