விஏஓ உதவியாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் திமுக ஒன்றிய கவுன்சிலர்...! ஆடியோ வைரல்...!! 

விஏஓ உதவியாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் திமுக ஒன்றிய கவுன்சிலர்...! ஆடியோ வைரல்...!! 

திருச்சியில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரிடம் பணம் கேட்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் பணிக்கு தேர்வாகியுள்ள பெண்ணிடம் திமுக ஒன்றிய கவுன்சிலரும், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளருமான பாலமுருகன் பணம் கேட்டு மிரட்டுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


தமிழக அரசு அண்மையில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர்கள் பணிக்கு ஆட்களை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி மாவட்டத்திலும் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிராம நிர்வாக உதவியாளர்களை தேர்வு செய்து  திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் பணி நியமன ஆணை வழங்கினார். தேர்வானவர்களிடம் அரசியல் கட்சியை நிர்வாகிகள் தங்களது செல்வாக்கினால்தான் பணி நியமன ஆணை பெற்று உள்ளீர்கள் என்று கூறி ரூ5 லட்சம்  முதல் 10 லட்சம் வரை வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சி, திருவெறும்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட சூரியூர் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு குண்டூரை சேர்ந்த காயத்ரி என்பவர் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். அந்தப் பணி தங்களால்தான் கிடைத்தது என்றும் இந்த பணிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர்  7 லட்சம் வரை ஒரு பெண்ணிடம் பேரம் பேசி உள்ளதாகவும், அவர் 5 லட்சம் வரை தர முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் மூன்று லட்சம் மட்டுமே கேட்பதாகவும்,  அது கூட வேண்டாம் 2 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும் எனவும் திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் திமுக மாவட்ட துணை செயலாளருமான பாலமுருகன் காயத்ரியிடம் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது. அதற்கு அந்தப் பெண் பணம் கொடுக்க விருப்பமில்லை என்று கூறுகிறார். மேலும் "இப்படி என்னிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்தால் நான் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தபால் எழுதி அனுப்பிவிட்டு வேலையை ராஜினாமா செய்து விடுவேன்" என கூறியுள்ளார். அதற்கு பாலமுருகன் "வேலை பார்க்க விருப்பம் இருந்தால் பணம் கொடு. இல்லை என்றால் வேலையை விட்டு போ" என்பது போல் பேசுவதாக ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.