உலகின் சிறந்த கொடையாளி கர்ணனா? தருமனா.? கிருஷ்ணர் சொன்ன பதில்.!  

உலகின் சிறந்த கொடையாளி கர்ணனா? தருமனா.? கிருஷ்ணர் சொன்ன பதில்.!  

மகாபாரதத்தில் எப்படி சிறந்த வில்லாளர்கள் யார் என்ற போட்டி கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இருந்ததோ அதே போல யார் தர்மத்தில் மிகவும் சிறந்தவர் என்ற போட்டி கர்ணனுக்கும் தருமருக்கு இருந்தது. 

கர்ணன் மற்றும் தருமர் செய்த தர்மங்கள் பற்றியும் கொடை பற்றியும் மஹாபாரதத்தின் பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தர்மர் செய்த தானங்களை விட கர்ணன் செய்த தானங்களே புகழ்பெற்றது. அதனால் தான் கர்ணன் கொடைவள்ளல் என்று புகழப்பட்டார். இவ்வளவு ஏன் மஹாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூட தர்மனை விட கர்ணனே மிகப்பெரிய கொடை வள்ளல் என்று கூறியுள்ளார். 

அர்ஜுனன் ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணரிடம் பேசிக் கொண்டிருந்தபோது , கிருஷ்ணா , எனது அண்ணனே தர்மத்தில் மிகவும் சிறந்தவர், அவரது பெயரிலேயே தர்மம் குடி கொண்டுள்ளது என்று வியந்து கூறினான்.
அதைக்கேட்ட ஸ்ரீ கிருஷ்ணரோ பலமாக சிரித்தார் .

இதனால் கோபமான அர்ஜுனன்ஏன் சிரிக்கிறீர்கள் ? என்று கிருஷ்ணரிடம் கேட்டான். அதற்கு கிருஷ்ணர் நான்தான் முன்பே சொன்னேனே , வாரி வழங்குவது என்றாலே அது கர்ணன்தான் என்றார்.

உடனே அர்ஜுனன் சரி சரி , என்னுடைய அனுபவம் வேறு , ஆனால் அண்ணன் தர்மர், வள்ளல் தன்மையில் மிக சிறந்தவர் . கர்ணன் பெயரில் தர்மம் உள்ளதா? எங்கள் அண்ணன் பெயரில் தர்மம் உள்ளதா? நீங்களே  சொல்லுங்கள் என்றான் அர்ஜுனன் .

அர்ஜுனா உனக்கு சொன்னால் புரியாது , வா செயலில் காண்பிக்கின்றேன் என அர்ஜுனை அழைத்துக்கொண்டு தருமரின் அரண்மனையை நோக்கி புறப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர் . 

இருவரும் தங்கள் உருவங்களை அந்தணர்களைப் போல மாற்றிக்கொண்டு, மன்னர் தருமரை பார்க்க வேண்டும் என அரண்மனை வாயில் காப்போனிடம் சொன்னார்கள் , அவனும் இருவரையும் உள்ளே செல்லுங்கள் என அனுமதி அளித்தான்.

உள்ளே சென்ற இருவரையும் மிக பணிவுடன் வரவேற்று உபசரித்து அமரச் செய்தார் தர்மர்.
உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என பவ்யமாக வினவிய தர்மரிடம் அந்தணர் தோற்றத்தில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் , மன்னா , நாங்கள் பக்கத்துக்கு ஊரைச் சேர்ந்தவர்கள் , நாங்கள் யாகம் செய்ய உத்தேசித்துள்ளோம் , அதற்கு கொஞ்சம் சந்தன மரங்கள் தேவைப்படுகிறது , தாங்கள் தந்து உதவ முடியுமா ? என்று கேட்டார்.

அதற்கென்ன இப்போதே தருகிறேன் , என்ற தர்மரிடம், இப்போது வேண்டாம் மன்னா , நாங்கள் தேவைப்படும் நாளில் வருகின்றோம் வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று அந்தணர் தோற்றத்தில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார். சரி அய்யா , உங்களுக்கு தேவைப்படும் நாளில் வாருங்கள் என்று கூறி வழியனுப்பி வைத்தார் தர்மர்.

இருவரும் அரண்மனையை விட்டு வெளியேறினார்கள். வெளியே வந்ததும் இருவரும் நேராக கர்ணனின் அரண்மனைக்கு சென்றார்கள். அங்கும் கர்ணனைப் பார்த்து அந்தணரின் தோற்றத்திலிருந்த ஸ்ரீகிருஷ்ணர் , மன்னா , நாங்கள் அருகிலிருக்கும் ஊரைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு யாகம் செய்வதற்கு கொஞ்சம் சந்தன மரங்கள் வேண்டும் தங்களால் தந்தருள முடியுமா? என பவ்யமாக கேட்டார்.

அதற்கு கர்ணன் தாருங்கள் என்று கட்டளை இடுங்கள் அய்யா.! , முடியுமா என கேட்காதீர்கள் என்று கூற 
மிகவும் சந்தோஷம் மன்னா , தேவைப்படும் நாளில் நாங்களே வந்து தங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம் , வருகிறோம் மன்னா , என்று கூறி விடை பெற்றார்கள் அர்ஜுனனும் கிருஷ்ணரும் .

என்ன கிருஷ்ணா , ஒன்றும் வாங்காமல் பேசிவிட்டு வருகிறாய் என்றான் அர்ஜுனன். பொறு , காலம் வரும்போது வாங்கி கொள்ளலாம் என்றார் கிருஷ்ணர் . மாயக்கண்ணன் என்பது சரியான பெயர்தான் உனக்கு என்றான் அர்ஜுனன்.சிரித்துக்கொண்டார்  கிருஷணர்.

நாள்கள் ஓடின , இல்லையில்லை பறந்தன. மழைக்காலமும் துவங்கியது. கிருஷ்ணர் தனது விளையாட்டை துவக்கினார். அர்ஜுனாவை பார்த்து  வா அர்ஜுனா, நமக்கு சந்தன மரங்கள் தேவைப்படும் காலம் வந்து விட்டது , சென்று வாங்கி வரலாம் என்றார் கிருஷ்ணர்.

இந்த மழையிலா ? என்ற அர்ஜுனனிடம்,,, ஆமாப்பா வா என்று அர்ஜுனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். இருவரும் அந்தணரின் தோற்றத்தில் தருமரின் அரண்மனைக்கு சென்றார்கள்.
அந்தணர்களே , வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்று உபசரித்தார் தருமர்.

அமர்ந்து நலம் விசாரித்து , உபசரித்து முடிந்தபின்,,, அந்தணர் தோற்றத்திலிருந்த கிருஷ்ணர் மெல்ல மன்னா , நாங்கள் கேட்டோமே சந்தன மரங்கள் அவை இப்போது தேவைப்படுகிறது அதனை வாங்கிச் செல்லவே வந்துள்ளோம் என்று பணிவாக கேட்டார்.

அதற்கு தர்மர் , அந்தணர்களே , சந்தன மரங்கள் நிறைய உள்ளது ஆனால் இப்போது மழைக்காலமாக உள்ளதால் எல்லா மரங்களும் மிகவும் நனைந்து ஈரமாக இருக்கும். ஈரமான சந்தன மரங்கள் யாகத்திற்கு உதவாதே , அதனால் வேறு ஏதாவது மரங்கள் தருவதற்கு ஏற்பாடு செய்யட்டுமா என்று மிக பவ்யமாக கேட்டார்.

இல்லை மன்னா, எங்களுக்கு சந்தன மரங்கள்தான் வேண்டும் , நம்பி வந்தோம் இல்லை என்று சொல்லி விட்டீர்களே என வருத்தப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். அதற்கு தர்மர், தயவு செய்து மன்னியுங்கள் அந்தணர்களே , யாகத்திற்குரிய வேறு ஏதேனும் கேளுங்கள் வேண்டுமளவு தருகின்றேன் என்று கூற, வேண்டாம் மன்னா , கவலையை விடுங்கள் , நாங்கள் புறப்படுகின்றோம் , என்று கூறி இருவரும் வெளியேறினார்கள்.

வெளியே வந்ததும் அர்ஜுனா , பார்த்தாயா , தர்மன் செய்த காரியத்தை என்றார் கிருஷ்ணர் .
அதற்கு அர்ஜுனன் உன் மேல் தவறு கிருஷ்ணா , உனக்கு வேண்டுவதை மழைக்காலத்தில் வந்து கேட்டால் அவர் எப்படி தரமுடியும் ? வெயில் காலத்தில் வந்துகேட்டு இல்லை என்று சொல்லியிருந்தால்தான் தவறு , யாராக இருந்தாலும் இப்படித்தான் சொல்வார்கள் என்றான்.

உடனே கிருஷ்ணர், அப்படியா சொல்கிறாய், வா கர்ணனையும் பார்த்து விடுவோம் என்று கூற, 
அவனும் அதையே தான் சொல்வான் , இதற்கு அங்கு போக வேண்டுமா என்று சலிப்புடன் சொன்னான்  அர்ஜுனன். சரி வா பார்ப்போம் என்று சொல்லி அவனையும்  அழைத்துக்கொண்டு கர்ணனின் அரண்மனையை நோக்கி நடந்தார் கிருஷ்ணர் .

இருவரையும் கண்ட கர்ணன், வாருங்கள் வாருங்கள் அந்தணர்களே, யாகத்திற்கு சந்தனமரங்கள் கேட்டீர்களே , எங்கே வராமல் இருந்து விடுவீர்களோ என்றெண்ணி பயந்தேன் என்று கூற, மன்னா , எங்களுக்கு இப்போது அந்த சந்தன மரங்கள் வேண்டும் , அதனை தரமுடியுமா என இழுத்தவாறே கேட்டார் அந்தணர் வடிவிலிருந்த கிருஷ்ணர்.

உடனே பதறிய கர்ணன், அந்தணர்களே ,என்மேல் என்ன கோபம் ஏன் இப்படி கேட்கின்றீர்கள் ? எனக் கூற, 
மன்னா , பதற்றம் வேண்டாம் , எங்களுக்கு உங்கள் மீது கோபமோ வருத்தமோ துளியும் இல்லை , மழைக்காலத்தில் வந்து கேட்கின்றோமே அதனால் மரங்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகம் வேறொன்றுமில்லை என்றார் கிருஷ்ணர்.

இதற்காகவா வருந்துகின்றீர்கள் , இப்போதே உங்களுக்கு வேண்டிய சந்தன மரங்களை தருகின்றேன் என்ற கர்ணனிடம், மன்னா , நாங்கள் வருவோம் என்று முன்பே எடுத்து வைத்துள்ளீர்களா என சந்தேகமாக கேட்டான் அந்தண வடிவிலிருந்த அர்ஜுனன்.

அதற்கு இல்லை அந்தணரே, நான் முன்பே எடுத்துவைக்கவில்லை என்றான் கர்ணன்.பின் எப்படி மன்னா எங்களுக்கு சந்தன மரங்களை தருவீர்கள்? யாகத்திற்கு காய்ந்த சந்தன மரங்கள் அல்லவா வேண்டும் என்று புரியாமல் கேட்பது போல் கேட்டார் கிருஷ்ணர். 

அய்யா அந்தணர்களே , இந்த அரண்மனையின் உள்ளே இருக்கும் அத்தனை கதவுகளும் , ஜன்னல்களும் மிக உயர்ந்த சந்தன மரங்களால் ஆனவைகள் , இவைகளை இப்போதே உங்களுக்கு எடுத்து தருகிறேன் என்று சொல்லி , யாரங்கே , இங்கே வாருங்கள் என அழைத்து , உடனடியாக அரண்மனையின் உள்ளே இருக்கும் அத்தனை சந்தன மரக் கதவுகளையும்  ஜன்னல்களையும் ஜாக்கிரதையாக பெயர்த்து எடுத்து இதோ இந்த அந்தணர்கள் சொல்லும் இடத்தில் சேர்த்து விட்டு வாருங்கள் என்று உத்திரவிட்டான் கர்ணன். மிகவும் அதிசயமான ஒரு மனிதனை கண்டதுபோல் இருவரும் கர்ணனை கண்டு வணங்கி விடை பெற்றார்கள் .

அப்போது பேசிய கிருஷ்ணர், அர்ஜுனா , உன் அண்ணனின் அரண்மனையிலும் உள்ளது எல்லாம் சந்தன மரங்களால் ஆனவையே , ஆனாலும் உன் அண்ணனுக்கு இந்த உள்ளமில்லையே , பெயரில் தர்மம் இருப்பதால் பயனில்லை செயலில் தர்மம் வேண்டும். தன்னிடமுள்ளதை எதையும் இழக்காமல் தர்மம் செய்வதற்கும் , தன்னையே தர்மத்தில் இழப்பதற்கும் வேறுபாடு உண்டு , கர்ணன் தர்மத்தில் தன்னையே இழப்பவன். அவனை தர்மத்தில் மிஞ்ச யாரும் இல்லை என்று கூற, அர்ஜுனன் எதுவும் பேசாமல் தலையை குனிந்து நின்றான்.