குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்...சரணடைந்த டொமினிக் மார்ட்டின் வீடியோ வைரல்!

களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம் என போலீசில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் முன்கூட்டியே பதிவு செய்த வீடியோ வெளியானது. 

கேரளா மாநிலம் கொச்சி களமச்சேரியில் உள்ள  கிறிஸ்தவ கூட்டரங்கில் பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, மூன்று முறை வெடிகுண்டு வெடித்தது. அதில் இருவர் பலியான நிலையில் 56 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டோமினிக் மார்ட்டின் , போலீசில் சரண் அடைவதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கேரளா, களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம், சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை  என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது  வைரலாகி வருகிறது.