கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு ..! மத்திய அரசின் சிறப்பு குழு கேரளம் செல்கிறது..!

கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு ..! மத்திய அரசின் சிறப்பு குழு கேரளம் செல்கிறது..!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் திங்களன்று ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று கருதிய சுகாதார நிபுணர்கள், உயிரிழந்தவர்களின் மாதிரிகளை புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பினர். இந்த நிலையில் சோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் வைரசை கட்டுப்படுத்த கேரள அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்றும் இதற்காக மத்திய அரசின் சிறப்பு குழு கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

இதனிடையே நிபா வைரஸ் காரணமாக மக்கள் கவலைப்பட தேவையில்லை என கேரள  முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இறந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும்
 சுகாதாரத்துறை தயாரித்துள்ள தடுப்பு திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறும் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.கோழிக்கோடு பகுதிகளில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.