அப்புறம் பசிக்கும்ல...திருட போன இடத்தில் கிச்சடி செய்து சாப்பிட்ட அப்பாவி திருடன்!!

கொள்ளையடிக்க வந்த வீட்டில் கிச்சடி சமைத்து சாப்பிட்ட கொள்ளையனை கைது செய்த போலீசார் டுவிட்டர் பக்கத்தில் கலாய்த்து பதிவிட்டுள்ளனர்.

அப்புறம் பசிக்கும்ல...திருட போன இடத்தில் கிச்சடி செய்து சாப்பிட்ட அப்பாவி திருடன்!!

பொதுவாக வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் போது திருடர்கள் விநோதமான முறையில் சிக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் கிச்சடி சமைத்து சாப்பிட்டு போலிசாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஹெங்ராபுரி எனும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிப்பதற்காக சென்ற திருடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை திருடி விட்டு அங்கிருந்து புறப்பட முயன்றுள்ளான். அப்போது திடீரென அவருக்கு பசிக்க ஆரம்பித்ததால், திருட வந்த வீட்டின் கிச்சனுக்கு சென்று கிச்சடி சமைத்து ருசியாக சாப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில் பூட்டிய வீட்டில் இருந்து பாத்திரம் உருட்டும் சத்தம் வருவதை கேட்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மக்கள் எல்லாம் உஷாராணதை கண்ட திருடன் உடனடியாக தப்பிக்க  முயற்சித்திருக்கிறான். அப்போது அந்த நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் திஸ்பூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அசாம் காவல்துறையின்  டுவிட்டர் பக்கத்தில், ”கிச்சடி உடல்நலத்திற்கு நல்லது தான். ஆனாலும் திருட்டு வேலையில் ஈடுபடும் போது வாழ்வுக்கே தீங்கு விளைவிக்கும்” என கிண்டலாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கைதான திருடனுக்கு கவுகாத்தி போலீசார் ஹாட் மீல்ஸ் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வப்போது இணையத்தில் வரும் வீடியோக்களை கண்டு மகிழும் இணையதள வாசிகள், தற்போது இந்த வீடியோவை பார்த்த   டுவிட்டர் தள வாசிகள் பலரும் இந்த சம்பவத்தைக் கண்டு மகிழ்ந்தாலும், ஒரு சிலர் திருட்டுச் சம்பவத்தின் போது சமைத்த அவருக்கு உணவு தேவை என்று நினைத்தனர்.

இந்தியாவில் கொள்ளை முயற்சியின் போது ஒருவர் சற்று கவனம் சிதறுவது இது முதல் முறை அல்ல. இதேபோன்று கடந்த ஆண்டு, மராட்டிய  மாநிலம் தானேயில் உள்ள நௌபாடா போலீசார், அனுமன் கோவிலில் இருந்து நன்கொடை பெட்டியை திருடியதாக ஒருவரை கைது செய்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போலீசாருக்கு, நன்கொடைப் பெட்டியை எடுத்துச் செல்வதற்கு முன், அனுமன் சிலையின் பாதங்களைத் திருடன் தொட்டதைக் கண்டு நகைப்பாவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.