கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ரயில்வே பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த குறிஞ்சிப்பாடி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொளஞ்சி என்பவர் அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தினர். அப்போது அதை ஓட்டி வந்த குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியை சேர்ந்த காளி என்பவர் முகக்கவசம் அணியாமலும் தலைக்கவசம் அணியாமலும் வந்ததால் அவரது ஆவணங்களை சரிபார்ப்பதற்காக போலீஸார் கேட்டுள்ளனர்.
அப்போது காளி நான் விசிக கட்சிக்காரன். எங்களின் வாகனங்களையே மறிக்கிறீர்களா. எங்கள் கைவசம் 4 எம்எல்ஏ உள்ளனர். நானே ஒரு வழக்கறிஞர்தான். எங்களது வாகனங்களை நீங்கள் எப்படி நிறுத்தலாம்? என கேட்டு காவல் துறையினரை காளி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. காளி பேசியதை போலீஸார் வீடியோவாக எடுத்தனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் ஒருமையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வாக்குவாதம் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காளி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி நகரச் செயலாளராக உள்ள பாலமுருகனின் தம்பி என கூறப்படுகிறது.
ஏற்கெனவே இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காரர் என கூறிக் கொண்டு ஊரடங்கின் போது வெளியே வந்ததால் அவரை போலீஸார் விசாரித்த போது அவர்களை அந்த நபர் மிரட்டியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. ஊரடங்கை மீறலாமா ஊரடங்கை மீறியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியும் சிலர் வெளியே வரும்போது போலீஸார் அவர்களை வழிமறித்து அபராதம் விதிக்க முற்பட்டால் இதுபோல் தான் ஒரு கட்சிக்காரன், வழக்கறிஞர் என கூறி அவர்களுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.