அமெரிக்காவில் இடைத்தேர்தல்...பதவியை இழப்பாரா ஜோ பைடன்?!..இடைக்கால தேர்தல் குறித்து விரிவாக காணலாம்!!

அமெரிக்காவில் இடைத்தேர்தல்...பதவியை இழப்பாரா ஜோ பைடன்?!..இடைக்கால தேர்தல் குறித்து விரிவாக காணலாம்!!

அமெரிக்காவில் இன்று  இடைக்காலத் தேர்தல் நடந்துவரும் நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது, இந்தத் தேர்தல் மூலம் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இடைக்காலத் தேர்தல்:

அமெரிக்க நாடாளுமன்றம், பிரதிநிதிகள் சபை, செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இந்த இரு அவைகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.

அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரம்:

அமெரிக்க நாடாளுமன்றம் நாடு தழுவிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்டது. பிரதிநிதிகள் சபை ஆதரித்து வாக்களிக்கும் ஒரு சட்டத்தை செனட் சபையால் தடுக்கவும், அங்கீகரிக்கவும் முடியும்.

அதேபோல, அதிபரால் மேற்கொள்ளப்படும் நியமனங்களை இவர்களால் உறுதி செய்ய முடியும். தேவைப்பட்டால் அதிபருக்கு எதிராக விசாரணையும் நடத்த முடியும். ஆனால், இது மிக அரிதாகவே நடக்கும்.

செனட் உறுப்பினர்கள்:

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட் சபை உறுப்பினர்கள் உண்டு. அவர்களது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். சிறிய மாவட்டங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் பிரதிநிதி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் தேர்தல்:

பிரதிநிதிகள் சபைக்கான அனைத்து உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பரில் நடைபெறும் இந்தத் தேர்தலோடு, மூன்றில் ஒரு பங்கு செனட் உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும்.

இதனோடு பல பெரிய மாகாணங்களில் ஆளுநர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தலும் நடைபெறும்.

வெல்ல போவது யார்?:

கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு அவைகளிலுமே ஜனநாயக கட்சிக்கு இருந்த பெரும்பான்மையாலேயே தான் விரும்பிய சட்டங்களை நிறைவேற்றுவது ஜோ பைடனுக்கு உதவியாக இருந்தது.

கருத்து கணிப்பு:

பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சிகள் கைப்பற்றலாம் என்றும் செனட் சபையில் ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் தொடரும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

எது பெரிய பிரச்னை?:

இந்தாண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டினர் குடியேற்றம், குற்றங்கள், வாழ்வாதார செலவினங்கள் ஆகியவை இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கும் என்றும் அவை பழமைவாத குடியரசு கட்சியினர் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயக கட்சி பிரச்சார மையம்:

ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் தேசிய கருக்கலைப்பு பாதுகாப்புகளை ரத்து செய்தது அந்தச் சூழலை மாற்றிவிட்டது. கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை பெண்களுக்கு உள்ளது என்ற கருத்தை ஆதரித்துவரும் ஜனநாயக் கட்சியினர் அதை பல இடங்களில் தங்களுடைய பிரசாரத்தின் மையமாக்கியுள்ளனர்.

குடியரசு கட்சி பிரச்சார மையம்:

தற்போது அந்தத் தீர்ப்பின் தாக்கம் மக்கள் மத்தியில் குறைந்து வருவதால், பணவீக்கம், வெளிநாட்டினர் குடியேற்றம் மற்றும் வன்முறைக் குற்றங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி குடியரசு கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?:

பொதுவாக இடைக்கால தேர்தல் முடிவுகள் என்பது அதிபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பததை மக்கள் வெளிப்படுத்தும் இடைக்கால தீர்ப்பாக இருக்கும்.

அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் முதல் வாக்காளர்கள் மத்தியில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான செல்வாக்கு கொண்ட அதிபர் ஜோ பைடனுக்கு இது கவலை தரக்கூடிய விஷயம் ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால்..:

'ஜனநாயக கட்சி' ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தால், காலநிலை மாற்றம், அரசின் சுகாதார திட்டங்களை விரிவுபடுத்துதல், கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தனது திட்டங்களை அதிபர் பைடனால் தொடர முடியும்.

2024 அதிபர் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?:

2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்பதற்கான குறிப்பை இந்த இடைக்காலத் தேர்தல் வழங்க அதிக வாய்ப்புள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    பயிற்சியின் போது காயமடைந்த ரோகித்...இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடுவாரா?!!