ஆப்கானிஸ்தானில் ஊடகங்களை மூடி அட்டூழியம் செய்யும் தலிபான்கள்...

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், அங்கு 150க்கும் மேற்பட்ட ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஊடகங்களை மூடி அட்டூழியம் செய்யும் தலிபான்கள்...

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, அந்நாட்டில் பெண் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை கேள்விக் குறியாகும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தானின் 20 மாகாணங்களில் உள்ள பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் என 153 ஊடக நிறுவனங்கள் தாலிபான்களின் கட்டுப்பாடுகளால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர், தாலிபான்கள் அமைப்பை ஆதரிக்கும் ஊடகங்கள் தங்கள் மீது கவனம் செலுத்தவில்லையெனில் விரைவில் நாட்டில் உள்ள பிற ஊடகங்களையும் மூடும் நிலை ஏற்படும் என கூறினார். இந்த பிரச்னையை தீர்க்க சர்வதேச ஊடகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் பத்திரிகை மற்றும் மக்களின் சுதந்திரம் விரைவில் பறிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் காபூலில் நடைபெற்ற போராட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் இருவரை கைது செய்த தாலிபான்கள், அவர்களை காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது