உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய முயற்சி.. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என இரு நாடுகளும் தகவல்!!

உக்ரைனில் இருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக, விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என ரஷ்யாவும், துருக்கியும் தெரிவித்துள்ளன.

உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய முயற்சி.. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என இரு நாடுகளும் தகவல்!!

ரஷ்யாவின் கருங்கடல் முற்றுகையால், உக்ரைனில் பல கோடி டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட முடியாமல், முடங்கிக் கிடக்கின்றன.

இதனால், உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பான தானிய ஏற்றுமதிக்கான முன்னெடுப்புகளை, ரஷ்யாவின் கடல்சார் அண்டை நாடான துருக்கி மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா. கோரியது. அதன்படி துருக்கி அதிபர் எர்டோகன், ரஷ்ய அதிபர் புதினிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதன் பலனாக, தானிய ஏற்றுமதிக்காக கருங்கடலில் சாத்தியமான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது தொடர்பாக, தொடர்ந்து விவாதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும், துருக்கி அரசுப் பிரதிநிதியும் தெரிவித்துள்ளனர்.

அங்காரா, மாஸ்கோ மற்றும் கீவ் இடையே ’ஹாட்லைன்’ தொடர்பு ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டும் வகையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் மரியுபோல் துறைமுகத்தில் சிக்கியிருந்த துருக்கி சரக்குக் கப்பல், பாதுகாப்பாக வெளியேறியது. நேட்டோ உறுப்பினராக இருந்தாலும் ரஷ்யாவுடன் தொடர் நட்புறவுடன் இருந்து வரும் நாடு துருக்கி என்பது குறிப்பிடத்தக்கது.