வேதியியலுக்கான நோபல் பரிசு வெல்லும் நோபல் நாயகர்கள் யார் ..?

வேதியியலுக்கான நோபல் பரிசு வெல்லும் நோபல் நாயகர்கள் யார் ..?

2022 ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோபல் பரிசு :

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதுகள் ஒன்றான நோபல் பரிசு, பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட சாதனைகளை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

மருத்துவத்துக்கான நோபல் பரிசு :

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கானநோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மரபியல் சார்ந்த ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய சுவீடனை சேர்ந்த மரபணு நிபுணர் ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை தட்டி சென்றவர் யார்?

இயற்பியலுக்கான நோபல் பரிசு : 

அந்த வகையில் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் தகவல் அறிவியலில் பல்வேறு சாதனைகள் படைத்ததற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி அலெய்ன் அஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பிரான்சிஸ் க்ளாஸர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் ஜெய்லிங்கர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க : இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு... யார் அந்த 3 பேர்?

வேதியியலுக்கான நோபல் பரிசு :

இந்நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுக்காக அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோஸி, டென்மார்க்கின் மார்டன் மெல்டால் என்கிற மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பேரி ஷார்ப்லஸ் என்ற விஞ்ஞானி கடந்த 2001 ஆம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற துறைகளுக்கான நோபல் பரிசு : 

தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) இலக்கிய துறைக்கான விருதுகளும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அமைதிக்கான விருதும், வருகிற 10- ஆம் தேதி பொருளாதாரத்திற்கான விருதும் அறிவிக்கப்பட உள்ளது. 

--சுஜிதா ஜோதி