இலங்கையின் அடுத்த அதிபர் யார்?.. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தல்!!
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசு - மக்கள் முறையீடு:
இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரசிங்கே இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப் பினும் நெருக்கடி சூழலுக்கு வித்திட்ட ஒட்டுமொத்த அரசையும் மாற்றி, புதிய அரசை உருவாக்க வேண்டும் என மக்கள் முறையிட்டு வருகின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தல்:
புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெரும எம். பி. ஆகியோர் இடையே, மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க, நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச ட்விட்:
முன்னதாக அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகி, தனது கட்சியின் ஆதரவை டலஸுக்கு வழங்கியுள்ள இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஊழலற்ற, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அரசு அமையும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.