ரணில் விக்கிரமசிங்க இலங்கை பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்வைக்கவில்லையா?

ரணில் விக்கிரமசிங்க இலங்கை பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்வைக்கவில்லையா?

புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க காலம் கடந்துள்ள நிலையில், நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு இன்னும் வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதிபரின் கொள்கை விளக்க உரையில் முரண்பாடு

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அதிபர் ரணில் நாடாளுமன்ற கொள்கை விளக்க உரையில் ஒரு வரையறையும், கொள்கைகளை முன்வைத்திருந்தாலும் என்ன செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாக இதுவரை எவருக்கும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

இதனால், கடன் பொறியில் இருந்து மீள பொருளாதரத்தை மீட்டெடுக்க இடைக்கால நிரந்தர வளர்ச்சிக்கான திட்டத்தை முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

பொருளாதாரத்தை குறுகிய காலத்திற்கு கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சி 10 வியடங்கள் அடங்கிய பொது வேலைத்திட்டத்த அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளது.

மீண்டும் ராஜபக்ச சகோதரர்களின் தலையீடு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைப்பு ரீதியான மாற்றத்தை எதிர்பார்த்த போது அப்படியான எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ராஜபக்ச சகோதரர்களின் ஊடாக அரசாங்கம் சேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு முதல் முறையாக நிதி தொடர்பான தேர்வுக்குழுவின் தலைவர் பதவியை வழங்கியமை குறித்து மகிழ்ச்சியடைக்கின்றேன்.

இதன் ஊடாக தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அமைச்சராக வேண்டும் என்ற தேவையில்லை என்பதை இந்த பதவியின் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்ட எதிர்பார்த்துள்ளேன்.

2023 ஆம் ஆண்டு மாற்றம் ஏற்படும்

மேலும் தற்போதைய நாடாளுமன்றம் உண்மையாக மக்களின் ஆணையை பிரதிபலிக்கவில்லை. உண்மையான மக்களின் ஆணையை பிரதிபலிக்கும் நாடாளுமன்றம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் தேர்வு செய்யப்படும் வரை இந்த பங்களிப்பை வழங்குவேன் எனவும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.