இலங்கை தமிழர்கள் நாடு திரும்புவதற்கு சிறப்புக் குழு அமைப்பு!

இலங்கை தமிழர்கள் நாடு திரும்புவதற்கு சிறப்புக் குழு அமைப்பு!

போர் நடைபெற்ற காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை எளிமைப்படுத்துவதற்காக இலங்கை அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

இலங்கை அதிபரின் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இக்குழுவில் குடிவரவு கட்டுப்பாட்டாளர், வெளிவிவகார அமைச்சின் சிறப்பு அதிகாரிகள், பதிவாளர் திணைக்களத்தின் சிறப்பு அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போர் காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை மீண்டும் அழைத்து வர வேண்டும் என "ஈழ ஏதிலியர் புனர்வாழ்விற்கான அமைப்பு" (OFERR) வேண்டுகோளை முன்வைத்திருந்தது. இதுகுறித்து பேசுவதற்காக, அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இன்று  அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப்பகுதியாக தற்போது உள்ள தமிழ்நாட்டில் சுமார் 58,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாகவும் அவர்களில் 3,800 பேர் மட்டுமே இலங்கை திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை இலகுபடுத்துவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும் இச்செயன்முறையை இலகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் எம். எம்.பி.கே. மாயாதுன்னே, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சகம் மற்றும் குடிவரவு செயலக அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ ஏதிலியர் புனர்வாழ்வுக்கான அமைப்பின் (OFERR) முதன்மை செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ். சூரியகுமாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.