ரிஷப் பண்ட்டின் 10 ஆண்டு கால சாதனை.. ஒரே நாளில் தூள் தூளாக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு...
ரிஷப் பண்ட்டின் 10 ஆண்டு கால சாதனை.. ஒரே நாளில் தூள் தூளாக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் உலகில் தற்போதைய ஹாட் டாபிக் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது யூத் ஒருநாள் போட்டியில் (Youth ODI), இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வைபவ், வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இதன் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டு நேபாள அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் படைத்த 18 பந்து அரைசதம் என்ற சாதனையை முறியடித்து, அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் வசப்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி தொடக்கத்திலிருந்தே எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அணிக்கு வழங்கப்பட்ட இலக்கை நோக்கி ஆடிய வைபவ், வெறும் 24 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். இவரது அதிரடியில் 10 வானளாவிய சிக்சர்களும், ஒரே ஒரு பவுண்டரியும் அடங்கும். அதாவது இவர் எடுத்த 68 ரன்களில் 60 ரன்கள் சிக்சர்கள் மூலமாகவே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சிறிய வயதிலேயே பல சாதனைகளைத் தன் வசம் வைத்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருந்தார். மேலும், 12 வயது 284 நாட்களில் ரஞ்சி கோப்பை போட்டியில் அறிமுகமாகி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்தார். அதுமட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு, ஐபிஎல் வரலாற்றிலேயே ஏலம் எடுக்கப்பட்ட மிக இளவயது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

வைபவ்வின் இந்த அசாத்தியமான வளர்ச்சி இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக 14 வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டிகளில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது பல முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வரும் ஜனவரி 15 முதல் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் தொடங்க உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில், வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது தற்போதைய ஃபார்ம் மற்றும் தன்னம்பிக்கை இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com